
சென்னை:
நடிகர் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்தபின் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் எனச் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம், எம்குமரன் சன் ஆப் மகாலெட்சுமி, சம்திங் சம்திங், கோமாளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் ரவி, ஆர்த்தி என்பவரைக் காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார்.
15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை சமரச பேச்சுவார்த்தைக்காக நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் 3 முறைக்கு மேல் மத்தியஸ்தர் முன் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர்.
அப்போது, நடிகர் ரவி, ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட நீதிபதி, சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்து பின் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்து வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 15 ம் தேதி தள்ளி வைத்தார்.




