
Aditya-L1 Launch Live Updates
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டிலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் முழுமையாகப் பிரிந்தது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது…
பெங்களூரு: சந்திரயான் – 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்தது. ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 11.50 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றன. கவுண்ட்டவுன் நிறைவடைந்த நிலையில் சரியாக இன்று பகல் 11.50 மணிக்குப் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது.
தொடர்ந்து ராக்கெட் பயணித்தது. ஒவ்வொரு நிலையாக அதிலிருந்து விண்கலம் பிரிந்தது. இதில், ராக்கெட்டிலிருந்து முழுமையாகப் பிரிந்த ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, 63 நிமிடங்கள் கடந்த பின்பு, இந்த நிலையை அடைந்துள்ளது.
பூமியிலிருந்து 648.71 கி.மீ. உயரத்திற்கு விண்கலம் சென்றடைந்து உள்ளது. விண்கலத்தில் லிக்விட் அபோகீ மோட்டார் என்ற சிறிய இயந்திரம் இணைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டார். ஆதித்யா எல்-1 விண்கலம் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டுள்ளது எனக் கூறிய அவர், சக பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி கூறியுள்ளார்.




