Ratan Tata: ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார்!

Advertisements

ரத்தன் டாடா: டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது காலமானார்

Ratan Tata: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா (Ratan Tata) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் சற்று முன் அவரது உயிர் பிரிந்தது. 86 வயதான ரத்தன் டாடா, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகத் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

இதனைத் திட்டவட்டமாக மறுத்த ரத்தன் டாடா தான் நலமாக இருப்பதாகவும் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி தற்போது அவரது உயிர் பிரிந்தது.

டாடா 1999 ஆம் ஆண்டு, தனது கொள்ளு தாத்தாவால் தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். 2012 ஆம் ஆண்டுவரை டாடா நிறுவனத்தை அவர் வழி நடத்தினார். 1996 ஆம் ஆண்டு டாடா டெலிசர்விசஸ் (TTML.NS) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை ரத்தன் டாடா தொடங்கினார். 2004 ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS.NS) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பொதுத்துறை நிறுவனமாகப் பட்டியலிட்டார். தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், டாடா சன்ஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் மதிப்புக்குரிய தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார்.

பார்சி சமூகத்தைச் சேர்ந்த டாடாவுக்கு 2000ஆம் ஆண்டில் தேசத்தின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. பிறகு, 2008ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *