
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தற்போது சென்னை புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், மிகப்பெரிய அரசியல் தலைவருமான நடிகர் விஜயகாந்த் அவர்கள் இன்று காலைச் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் அவருக்கு வயது 71. தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் விஜயகாந்த் அவர்கள்.
இவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபொழுது மிகப்பெரிய கடன் சுமையிலிருந்து அதனை மீட்டு நடிகர் சங்கத்திற்கு புத்துயிர் அளித்த ஒரு மிகச்சிறந்த கலைஞனாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கின்ற இரு மாபெரும் நடிகர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கெனத் தனி பாதை வகுத்து அதில் பயணித்து வெற்றி கண்ட ஒரு சிறந்த நடிகர் ஆவார்.
ஏழை, பணக்காரன் என்கின்ற பாகுபாடு இல்லாமல் அனைவரோடும் அன்பு பாராட்டும் எளிமையான குணம் படைத்த நடிகர் விஜயகாந்த். அவருடைய மரணம் திரைத்துறையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கி உள்ளது என்றே கூறலாம். தமிழ் மொழி கலைஞர்கள் மட்டுமல்லாமல், ஜூனியர் என்டிஆர் போன்ற இளம் பிறமொழி கலைஞர்கள் கூட நடிகர் விஜயகாந்த் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவது அவருடைய புகழின் உச்சியைப் பறைசாற்றும் வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையில் என்கின்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளிலிருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நாகர்கோவிலில் படபிடிப்பு பணிகளில் இருந்த நிலையில், தனது நண்பர் விஜயகாந்த் அவர்களுடைய மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளார்.
ஆகையால் நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பு பணிகளை நிறுத்திவிட்டு தற்போது அவர் சென்னைக்கு விரைந்துகொண்டிருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்று மாலை அல்லது நாளை விஜயகாந்த் உடலுக்கு அவர் நேரில் அஞ்சலி செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த அரசியல் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களுடைய உடல் நாளை மாலை 4 மணி அளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

