
அருண் ஜேட்லி தன்னை மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ராகுல்காந்திக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கருத்தரங்கில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, உழவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கக் கூடாது எனக் கூறி அருண் ஜேட்லி தன்னை மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ராகுல்காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உழவர் போராட்டத்துக்கு முன்பே அருண் ஜேட்லி இறந்து விட்டதாகவும், இதனால் ராகுல்காந்தி பொய்யர் என்பது அம்பலம் ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார். தனது தந்தை மிகவும் மென்மையானவர் என்றும், அவர் யாரையும் மிரட்டியதில்லை என்றும் அருண் ஜேட்லியின் மகன் கூறியுள்ளதையும் தமிழிசை சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரம் செத்துவிட்டதாக முதலில் குற்றஞ்சாட்டிய ராகுல்காந்தி, இப்போது தேர்தல் ஆணையம் செத்துவிட்டதாகக் கூறுவதாகத் தமிழிசை தெரிவித்தார்.


