
பாட்னா: ”தேர்தல் முடிவுக்குப் பின்னர் அமலாக்கத்துறை, மோடியிடம் அதானி பற்றிக் கேள்வி எழுப்பினால், எனக்குத் தெரியாது நான் பரமாத்மா மூலமாக வந்தவன் எனக் கூறி நழுவுவதற்காகவே, அவர் தன்னை பரமாத்மா எனக் கூறியதாகக் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
பீஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி தன்னை பரமாத்மா எனக் குறிப்பிடுவதற்கான காரணம் என்ன தெரியுமா? தேர்தல் முடிவுக்குப் பின்னர் அமலாக்கத்துறை, மோடியிடம் அதானி பற்றிக் கேள்வி எழுப்பினால், எனக்குத் தெரியாது, நான் பரமாத்மா மூலமாக வந்தவன் எனக்கூறி நழுவி விடுவார்.
நீண்ட நெடிய பேச்சுகளையும், நாட்டைப் பிளவுப்படுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். மோடி அவர்களே, இளைஞர்களுக்கு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினீர்கள் என்பதை பீஹார் மக்களுக்கு முதலில் சொல்லுங்கள்.
மோடி 22, 25 பேர்களை ராஜா மற்றும் மகாராஜாவாக ஆக்கியுள்ளார். அவர்களுக்கு அதானி, அம்பானியென வெவ்வேறான பெயர்கள் உள்ளன. அந்த ராஜாக்களுக்காகவே 24 மணிநேரமும் உழைக்கிறார். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தபிறகு, அக்னிபாத் திட்டத்தை நீக்குவோம். ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்வோம். மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறப்போம், 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். இவ்வாறு அவர் பேசினார்.

