
பெங்களூரு: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தனது 17 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டிய பெண் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (மே 26) உயிரிழந்தார்.
“53 வயதான அந்தப் பெண், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (மே 26) இரவு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது” எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண், எடியூரப்பாவுக்கு எதிராகக் கடந்த மார்ச் 14 அன்று பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கை, மாநில அரசு, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றியது. தற்போது வழக்கை விசாரித்து வரும் சிஐடி, சிஆர்பிசியின் 164-வது பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட மகள் மற்றும் தாயின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.


