
தேவை இல்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்…
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவை மாநகர பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்;- மத்திய அரசின் சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்தார். ஆளுநர்களை அரசியல் பக்கம் இழுக்கிறார்களா? அல்லது ஆளுநர்கள் அரசியல் பக்கம் சாய்கிறார்களா என்பது தான் கேள்வி.
நீட்டைப் பொறுத்தவரை யார் கொண்டு வந்தார்கள் என்பதும் தெரியும், நீட் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்பதும் தெரியும். தேவை இல்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும்.
அப்போதுதான் ஆளுநர்கள் அரசியலில் தலையிடுவது போன்ற சூழல் உருவாகாமல் இருக்கும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் ஆளுநரைக் குறை கூறுவதும் ஆளுநரைக் குறைத்து பேசுவதும் தான் தங்களுடைய அரசியல் என்ற புதிய போக்கை ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மாநில அரசு கடைபிடிப்பது சரியான அணுகுமுறை அல்ல. மாநில அரசு இதனை விட்டுவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்துகின்ற அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. நீட் குறித்து ஏன் ஆளுநரைக் குறை சொல்கிறார்கள்? உச்ச நீதிமன்றம் ஏன் செல்ல மறுக்கிறார்கள்? தமிழக அரசு ஆளுநர் தவறு செய்கிறாரென நினைத்தால் தாராளமாக உச்ச நீதிமன்றம் சல்லலாமே.
நீட் குறித்து ஏன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரை அரசியலுக்குள் இருப்பது தான் அரசியல் போக்காக உள்ளது என்றார்.
தமிழகத்தில் நீட் தான் மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உள்ளது. செய்ய முடியாததை செய்வதாகச் சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுநரைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் அவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டால் எல்லோரும் வரவேற்பார்கள். நானும் முன் நின்று வரவேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.



