
சென்னை:
‘அ.தி.மு.க., வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் 4 வாரத்திற்குள் கேட்க வேண்டும்’ எனத் தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அ.தி.மு.க., வில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை தொடர்பாக, முடிவெடுக்கக் கூடாது. அ.தி.மு.க., வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க., வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு இன்று (டிச.,04) நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. ‘அ.தி.மு.க., வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் 4 வாரத்திற்குள் கேட்டு முடிவெடுக்க வேண்டும்’ எனத் தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

