Advertisements

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 83ஆம் ஆண்டு நிறைவையொட்டி விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
1942ஆம் ஆண்டு ஆகஸ்டு ஒன்பதாம் நாள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் காந்தி தொடங்கினார். செய் அல்லது செத்து மடி என்கிற முழக்கத்துடன் நாட்டின் பல பகுதிகளில் புரட்சி வெடித்தது. மும்பையில் கடற்படை வீரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் புரட்சியைத் தொடங்கினர்.
இந்தியா விடுதலைபெற முதன்மைக் காரணமாக விளங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 83ஆம் ஆண்டு நிறைவையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் செய்தி விடுத்துள்ளார். அதில், மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் துணிச்சலுடன் பங்கேற்றவர்களின் தியாகத்தை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் துணிச்சல் நாடெங்கும் விடுதலைப் போராட்டத் தீயைக் கொழுந்துவிட்டெரியச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisements


