
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…
இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
29 லட்சம் ரூபாய் செலவில் 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை, தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில், சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான ‘வீரா’ என்ற அவசர மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 7.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளைத் திறந்து வைத்த முதலமைச்சர், திருப்பூர், திருப்பத்தூர் அகிய மாவட்டங்களில் கட்டப்பட உள்ள கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமண ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

