
மத்தியக் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகுவாரா? மாட்டாரா? என்பதை அரசு தெளிவாகக் கூற வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இன்று பிற்பகல் மூன்றரை மணியில் இருந்து நான்கு மணிக்குள் பேச்சு நடத்த நேரம் குறிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த இடத்தில் என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தங்கள் கோரிக்கைகளில் இரண்டை அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டதாகவும், தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார். அதனால் அவர் பதவி விலகுவாரா? விலக மாட்டாரா? என்பதை அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று அசுதோஷ் ரங்கா வினவினார்.
சோனம் வாங்சுக்கை அண்ணா ஹசாரே இரண்டு என்றும், அரசுடன் அவர் தனிப்பட்ட உடன்பாடு செய்துகொண்டார் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூது கூறியது, தன்னலமற்ற போராளியை அவமானப்படுத்தும் செயல் என்று அசுதோஷ் ரங்கா குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் எதிர்காலத்துக்காகத் தன்னுயிரைப் பணயம் வைத்து 26 நாட்கள் உண்ணாநோன்பிருந்த சோனம் வாங்சுக் பற்றித் தவறான கருத்துக்களைப் பரப்புவது, அவரை அவமானப்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறதென்று தங்களுக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் இந்தப் பேச்சின் மூலம் போராட்டக்காரர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சோனம் வாங்சுக் மீது கேள்வி எழுப்புவது சரியல்ல என்றும் அசுதோஷ் ரங்கா தெரிவித்தார்.
இதேபோல், தனக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாகவும், இருந்தாலும் தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியில் இருந்து விலகும்வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.


