
கந்தர்வகோட்டை அருகே தனியார் நிலங்களில் அனுமதி இன்றி மின்கம்பம் நடும் தனியார் சோலார் நிறுவனங்களை கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் கிராம மக்கள் பட்டுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், தனியார் நிலங்களில் அனுமதியின்றி மின்கம்பம் நடும் தனியார் சோலார் நிறுவனங்களை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.




