
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் மாதம் 2 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாயமானர். இதனையடுத்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்த நிலையில், 5 ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலிலிருந்து சிறுமியின் உடலைச் சடலமாகப் போலீசார் மீட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முதல் கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்ததை அடுத்து போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சிறுமி உடலைப் பிரதே பரிசோதனை செய்த ஜிப்மர் மருத்துவமனை அதன் அறிக்கையினை போலீசாருக்கு அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஆவணங்களைப் போலீசார் தயாரித்து வருகின்றனர்.
அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பிரதே பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான முழுமையான ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

