
கோல்கட்டா; மேற்கு வங்கத்தில் பா.ஜ., நடத்தி வரும் 12 மணி நேரம் பந்த்தை முன்னிட்டு பஸ் டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்து பஸ்களை இயக்கி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. நீதி கேட்டு மாணவர்கள் போராட, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மே.வங்கத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி: கண்ணீர் புகை குண்டு வீச்சு
மாநில அரசு மற்றும் போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பா.ஜ., முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அறிவித்தபடி, போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது.
ஹூக்ளி ரயில்நிலையத்தில் ரயிலை நிறுத்தி போராடிய பா.ஜ., ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். கூச் பீகார் பகுதியில் மாணவர் அணி தலைவர் சத்யன் லஹரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அலிபுரதுவார் பகுதியில் போராட்டம் நடத்திய ஏராளமான பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிதன்னா நகர் பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு உள்ளன.
முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் இறங்கி உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பஸ்களில் ஓட்டுர்கள் ஹெல்மெட் அணிந்த படி பணியாற்றி வருகின்றனர். அரசு உத்தரவுபடி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதாக ஓட்டுநர்கள் கூறி உள்ளனர்.



