
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது பெயரில் தொடங்கிய எக்ஸ் தளத்தை அவரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளாருமான பிரேமலதா விஜயகாந்த் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாகத் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். இதனையடுத்து நடைபெற்ற 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒற்றை ஆளாகச் சட்டமன்றத்திற்குள் சென்றவர் அடுத்த 5 வருடங்களுக்குள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக உருவெடுத்தார். கடவுளோடும் மக்களோடும் மட்டுமே கூட்டணியெனக் கூறி கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார்.
இதனையடுத்து அதிமுக- தேமுதிக இடையே மோதல் வலுத்த நிலையில் தேமுதிக எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக அதிமுகவில் இணைய தொடங்கினர். இதனால் ஏற்பட்ட கருத்து மோதலால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி 2016ஆம் ஆண்மு மக்கள் நல கூட்டணியில் இணைந்தார்.
ஆனால் இந்தத் தேர்தல் தேமுதிகிற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது. அப்போது விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், கட்சியின் செயல்பாடுகளில் தன்னால் முழுதாக ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தான் கடந்த மாதம் விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தில் கடந்த மாதம் காலமானார். இதனால் கட்சியின் பொறுப்பை முழுமையாக ஏற்கவேண்டிய நிலைக்குப் பிரேமலதா தள்ளப்பட்டார். இந்தநிலையில் விஜயகாந்த் பெயரில் தொடங்கப்பட்ட எக்ஸ் தளம் தற்போது பிரமேலதா தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார்.
முன்னதாகப் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், கேப்டன் அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அங்குள்ள திமுகவினரையும், அவர்களுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகளையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 20.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.



