
இன்று திருநெல்வேலிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதேபோல் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். நாளை நடைபெறும் அரசு விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்லி மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வருகிறார். காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலி வருகிறார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
பின்னர் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பின்னர் மின்னொளியில் ஜொலிக்கும் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு கட்டிடமாக சென்று பார்க்கிறார். இதற்காக பிரத்யேக மின்சார வாகனம் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் நாளை காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார்.
அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அந்த விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
50 புதிய பஸ் போக்குவரத்து சேவையையும் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிக்கு தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.


