
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி முதல் குமணன்சாவடி வரை சாலை கடுமையாகச் சேதம் அடைந்துள்ள நிலையில் மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் இன்னலடைந்து வருகின்றனர்.
பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. சாலைகள் சேதமடைந்தால் அவ்வப்போது சீர்செய்து வந்தனர்.
கடந்த ஒரு மாதக் காலமாகப் பூவிருந்தவல்லி முதல் குமணன்சாவடி வரை சாலையில் இருபுறத்திலும் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளது. இதை மெட்ரோ ரயில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.
குண்டுங் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கார் ஆட்டோ உள்ளிட்ட இலகு வாகனங்கள் கடும் இன்னலுக்கு இடையே பயணித்து வருகின்றனர்.
பல்லாங்குழி போலக் காட்சியளிக்கும் சாலையில் பகலில் தப்பிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மின்விளக்குகள் எரியாததால் இரவில் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கின்றது.
இதனால் இந்தச் சாலையை மெட்ரோ ரயில் நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்றும், சாலையின் இருபுறமும் மின்விளக்கு வசதியை நகராட்சி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


