
தொடர் விடுமுறையால் பழனி கோவிலில் 5 மணி நேரம்வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோயிலில் பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் நேற்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக் கிரிவல பாதையில் வருகை தந்து 5 மணி நேரம்வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகின்ற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி முக்கிய விழா 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து தற்போதிலிருந்தே முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்தவண்ணம் உள்ளனர். பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் காவடிகள் எடுத்துப் பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் சுமார் 4 மணி நேரம் வரையிலும், இலவச தரிசனம், சிறப்பு கட்டண வழி தரிசனம் மூன்று மணி நேரம் வரையிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறையால் பழனி கோவிலில் 5 மணி நேரம்வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.




