
புதுடில்லி: புதுடில்லியில், விமானம் தாமதமாகப் புறப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட விமானியைத் தாக்கிய பயணி கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி விமான நிலையத்திலிருந்து, கோவாவுக்கு, நேற்று முன்தினம், தனியார் துறையைச் சேர்ந்த, ‘இண்டிகோ’ நிறுவனத்தின் விமானம் புறப்படத் தாமதமானது. பல மணி நேரம் தாமதமானதால், விமானத்தில் இருந்த பயணியர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், விமானம் தாமதமாகப் புறப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட துணை விமானி அனுப் குமாரை, விமானத்தில் இருந்த சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கினார்.இதைப் பார்த்துச் சக பயணியர் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தன் செயலுக்கு, சாஹில் கட்டாரியா வருத்தம் தெரிவித்தார். எனினும், இதுகுறித்து, போலீசில் விமான ஊழியர்கள் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாஹில் கட்டாரியாவை கைது செய்தனர். இறுதியில் விமானம், 10 மணி நேர தாமதத்துக்கு பின், கோவாவுக்கு புறப்பட்டது.
விமானி அனுப் குமாரை சாஹில் கட்டாரியா தாக்கியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே, சாஹில் கட்டாரியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி விமானங்களில் பயணம் செய்ய முடியாதபடி, அவரை விமானத்தில் செல்லத் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், இண்டிகோ நிறுவனம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.


