POCSO Act: ஆசை வார்த்தையால் வாழ்வை தொலைத்த சிறுமி!

Advertisements

8 மாதமாகச் சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரைப் போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் தம்பதியின் 16 வயது மகள், திருமோகூர் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பைக் கடந்த ஆண்டு படித்து முடித்தார். மேற்படிப்பு படிக்க விரும்பியபோதும், குடும்ப வறுமையால் வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதன்படி தனக்கு தெரிந்த நபரின் பரிந்துரைப்படி அங்குள்ள ஒரு ஓட்டலில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காசாளராக வேலைக்குச் சேர்ந்தார். பெற்றோருக்கு அவரது வருவாய் உதவிகரமாக இருந்த நிலையில், மகளின் எதிர்கால திருமண தேவைக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

இதற்கிடையே திருவாதவூரை அடுத்த வெள்ளமுத்தான்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). தண்ணீர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், ஓட்டலுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை வந்து சென்றுள்ளார். அப்போது அவரது பார்வை 16 வயது சிறுமியின் மீது விழுந்தது. மெதுவாகப் பேச்சுக்கொடுத்து தன்பால் ஈர்த்த ராஜ்குமார், சிறுமியிடம் இந்த வேலை உனக்கு வேண்டாம், நான் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.

அதனை நம்பிய சிறுமியும் ராஜ்குமார் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எண்ண தொடங்கினார். சாவி கொடுத்த பொம்மையாகச் சிறுமியை மாற்றிய ராஜ்குமார் தனது காம இச்சைக்கு அவரை ஆளாக்க நினைத்து, வெள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

முன்னதாக நாம் கணவன், மனைவியாகி விடுவோம் என்று கூறி கோவிலில் வைத்து மாலை மாற்றித் திருமணமும் செய்துள்ளார். பின்னர் கடந்த 8 மாதமாகச் சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது. பின்னர் ராஜ்குமார் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். ஆசை வார்த்தையால் வாழ்வை தொலைத்த சிறுமி சைல்டு லைன் உதவியை நாடினார். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறையினர் சிறுமியைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவர்களின் வழிகாட்டுதல்படி, மேலூர் அனைத்து மகளிர் போலீசில் இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கொடி மலர் ஆகியோர் விசாரணை நடத்தி ராஜ்குமார் மீது திருமண சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழப்பதிவு செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து தலைமறைவான ராஜ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சித்தியையும் மகளிர் போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *