
அழகும் தொன்மையும் வாய்ந்த தமிழ்மொழியும் மகத்தான தமிழ்ப் பண்பாடும் இந்தியாவையும் மலேசியாவையும் ஒன்றிணைப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மலேசியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூரில் அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பேச்சு நடத்தினார்.அப்போது பண்பாடு, பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் புரிந்துணர்வு உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டன.
இது குறித்து இருநாட்டுப் பிரதமர்களும் கூட்டாகக் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது மலேசியப் பள்ளிகள், ஊடகங்கள், பண்பாட்டுச் செயல்பாடு ஆகியவற்றில் துடிப்பான பங்காற்றும் தமிழ் மொழி, இருநாட்டு மக்களையும் இணைப்பதாகத் தெரிவித்தார்.
அழகும் தொன்மையும் வாய்ந்த தமிழ் மொழி மீதான அன்பு இந்தியாவையும் மலேசியாவையும் இணைப்பதாகக் கூறிய மோடி, மலேசியாவில் கல்வி, ஊடகம், பண்பாட்டு வாழ்க்கை ஆகியவற்றில் தமிழ் வலிமையாகவும் உயிர்ப்புடனும் உள்ளதாகக் குறிப்பிட்டார். காட்சி ஒலி ஊடக திரைப்படத் துறை தொடர்பான உடன்பாடு இருநாடுகளையும் மிகவும் நெருக்கமாக்கியுள்ளதாகவும் கூறினார்.



