
பாமக நிர்வாகி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் பாமக நிர்வாகி சக்கரவர்த்தி. இவர் இரு தினங்களுக்கு முன்பு அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரெண்டாடி பகுதியை சேர்ந்த பிரபு என்ற இளைஞர், பெல் பைபாஸ் சாலையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பிரபுவை இடது காலில் சுட்டு பிடித்துள்ளனர். தற்போது அவர் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



