
சென்னை: திராவிட இயக்கத் தலைவரும் சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள்.
சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாகக் கடைபிடிப்பதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நாளில் சமூக நீதி காக்க உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாகப் பெரியார் பிறந்தநாளன்று சமூக நீதி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் இன்று சமூகநீதி நாள் உறுதி ஏற்பு நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூகநீதி நாளாக” கடைபிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று “சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு இணங்க, தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.9.2023) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு” நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


