
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையொட்டி இரு அவைகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் நாள் தொடங்கியது. தொடங்கிய முதல் நாளில் இருந்து நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.அதேபோல் அயோத்தி இராமர் கோவில் நன்கொடைப் பணம் முறைகேடு தொடர்பாகவும் விவாதம் நடத்த வலியுறுத்தினர்.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. இன்று மக்களவைக்குப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வந்திருந்தனர். அவை கூடிய சற்று நேரத்திலே தேசியக் கீதத்தின் ஆறடிகள் இசைக்கப்பட்டது. இதையடுத்து அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாகத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மாநிலங்களவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையைத் தலைவர் இராதாகிருஷ்ணன் காலவரையின்றி ஒத்தி வைத்தார். இத்துடன் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்தது.



