Panda Kaal Muhurtham: முகூர்த்தக் கால் நடுவதேன்? இது தான் காரணமா?

Advertisements

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் போன்றவை துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது மங்கள நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.

பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வோம்! வாங்க..

ஈசானிய மூலை:

திருமணத்திற்கு முன் வீட்டின் முன்பு முகூர்த்தக் கால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு. பெரும்பாலும் பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரங்களையே பயன்படுத்துவார்கள். மூங்கிலை நன்கு சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு வெள்ளைத் துணியில் செப்புக்காசை வைத்துக் கட்டி, இதை அந்த மூங்கிலின் மேற்பகுதியில் கட்டுவார்கள்.

பந்தக்கால் நடும் குழியில் நவதானியங்கள் போட்டு, பால் ஊற்றி உறவினர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பந்தக்காலை வடகிழக்கு மூலையில் நடுவார்கள். வடகிழக்கு மூலையை ஈசானிய திசையெனக் கூறுவர். ஈசானிய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும்.

நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு, மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகப் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

மணமகன் வீடு, மணமகள் வீடு, விசேசம் நடக்கும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்தப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சுபமுகூர்த்த நாளில், சுபமுகூர்த்த வேளையில் நடப்படும். இந்தப் பந்தக்காலே நடக்க போகும் விசேசத்திற்கு பந்தலை தாங்கி நிற்கும் தூண் போன்றதாக அமையும் என்பார்கள்.

மூங்கில் மரம் செழித்து உயரமாக வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.

வரலாற்றில் பந்தக்கால்:

தற்போது திருமண விழாக்களின்போது குலதெய்வம் மற்றும் விருப்பமான தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல, முந்தைய காலத்தில் நாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அந்நாட்டின் அரசருக்கும் மரியாதை நிமித்தமாகத் திருமண அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருந்தது.

அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

அந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே பண்டைய காலம் தொட்டு திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஊன்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

கண்திருச்டி விலகி நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காகவும் முகூர்த்தக் கால் நடப்படும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளைத் தொடங்குவார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *