
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதில் கிரிக்கெட் வீரர்கள் மூவர் உயிரிழந்ததையடுத்து மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அந்நாட்டுக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டுக் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் மூவர் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மூவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நவம்பர் மாத இறுதியில் நடைபெற இருந்த மூன்று நாடுகள் இருபது ஓவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.



