
உச்சநீதிமன்ற கண்டனத்துக்குப் பணிந்து 31 கைதிகள் முன்விடுதலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருப்பதாகத் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரியும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோப்புகளில் கையெழுத்திட கோரியும் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வருகிறது.
இன்று விசாரணையின்போது ஆளுநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீண்ட நாள் சிறையில் உள்ள 31 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 கைதிகள் முன்விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்:
நீண்டநாள் சிறையில் உள்ள 31 கைதிகளை முன்விடுதலை செய்யத் தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். கைதிகளை முன்விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 கோப்புகளில், 31 கோப்புகளுக்குத் தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். உச்சநீதிமன்ற கண்டனத்துக்குப் பணிந்து 31 கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். மேலும் 39 கைதிகளின் முன்விடுதலை வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்என் ரவி மறுப்பு கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் கே.சிவீரமணி மீது வழக்குப்பதிய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யத் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்தது. கோப்புகள் பரிசீலனையில் இருப்பதாகக் கடந்த விசாரணையின்போது கூறிய ஆளுநர் தற்போது திருப்பி அனுப்பி உள்ளார்.
அதேபோல டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.




