
தெற்கு ஆந்திரா நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே டிச.5ம் தேதி புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை 8:30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தொடர்ந்து நிலவி வந்தது. தற்போதைய நிலவரப்படி இந்தப் புயலானது சென்னைக்கு கிழக்கே- தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.
இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 3ம் தேதியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுபெறக்கூடும் எனவும் அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட கடலோர பகுதியில் சென்னைக்கு வரும் எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில், டிச.5ம் தேதி முற்பகலில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் டிசம்பர் 3ம் தேதி உருவாகும் புயல் வரும் 4ம் தேதி வட தமிழக கடலோர பகுதியை நெருங்கி வரும். டிச.3ம் தேதி உருவாகும் புயல் டிச. 4ல் சென்னையை ஒட்டி நிலை கொள்ளும்.
5ம் தேதி ஆந்திராவின் மசிலிபட்டினத்திற்கும், நெல்லூருக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிச்சவுங் எனப் பெயரிடப்பட உள்ள இந்தப் புயல் முதலில் வட தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். பின்னர், ஆந்திர கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து நெல்லூர், மசிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிச.4ம் தேதி மாலை சென்னை, மசிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


