
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் தலைவர் தமிழிசைக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசையை விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
நாடே எதிர்பார்த்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்ட பாஜக 242 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இதன் காரணமாகக் கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி அமைக்கவுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் 40 இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. குறிப்பாகத் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், இரண்டு மாநில ஆளுநராக இருந்த தமிழிசை தென் சென்னை தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
இதனையடுத்து தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளதாகவும், திமுகவிற்கு எதிராகத் தனது அரசியல் நடவடிக்கை இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும் தன்னை பரட்டையென நெட்டிசன்கள் விமர்சித்து வருவதாகவும் கூறிய அவர், தான் ஆளுநர் பதவியை விட்டு வந்து தோல்வி அடைந்தது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை,
உங்களுக்கு ஏன் இந்தக் கவலையென அரசியல் கட்சி இணையதளவாசிகளை விமர்சித்தார். தொடர்ந்து பாஜகவின் வார் ரூம் தரப்பினரையும் விமர்சித்து அவர், பாஜக தலைவர்கள் கருத்து கூறினால் பதிவிடுங்கள், அதை விடுத்து தவறாக எழுதுவது ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் அரசியல் தலைவர்கள்பற்றித் தவறாக எழுதினால் முன்னாள் தலைவர் என்ற முறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாஜகவினரையே எச்சரிக்கை செய்திருந்தார். இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அண்ணாமலை ஆதரவாளர் ஷிபின் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், அக்கா தமிழிசை பத்திரிகையாளர்கள் என்னும் பெயரில் வரும் பொறுக்கிகள் மைக்கை நீட்டியவுடன் நீங்கள் சரசர என்று பேசுவதை பார்த்தால் நீங்கள் இன்னும் பாஜக மாநில தலைவர் என்னும் நினைப்பில் இருப்பது போலத் தான் தெரிகிறது .
தங்களுக்கு அடியேனின் விண்ணப்பம் தங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. காரணம் மோடியின் அபிமானம் பெற்ற நபர்களில் நீங்களும் ஒருவர் .கட்சியை வளர்த்தீர்களோ தெரியாது ஆனாலும் பல வசவுகளை கடந்து தங்கள் போக்கிலே இருந்தீர்கள் .2019ல் தோல்வியடைந்தாலும் தங்களுக்கு 4 வது உட்சபட்ச பதவி கொடுத்தார்கள் . மீண்டும் அதை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள் .கோரிக்கை என்வென்றால் இந்தப் பேட்டி கொடுப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்.
தாங்கள் 2019 காலகட்டத்தில் பேட்டி கொடுத்து எந்த எதிர்ப்பையும் தங்களால் சமாளிக்க முடியவில்லை இனிமேலும் அது முடியாது .அண்ணாமலை அண்ணா அதைச் சிறப்பாகச் செய்கிறார். ஆகவே நமது தகுதி அறிந்து எவனாவது மைக்கை நீட்டுனா மாநில தலைவர் பதில் தருவார்னு சொல்லிட்டு கட்சிய வளர்க்காமல் எதிர்ப்பை மாற்றாமல் முன்பு கடந்து போனது போல இப்பவும் போய்டுங்க . அத விட்டு அன்பு அண்ணனுக்கு வணக்கம் அம்மாவின் பிள்ளைகளுக்கு வணக்கம்னு தனி ரூட் போட்டு உங்க அகங்கார போக்கை இங்க காட்டாதீங்க .
கட்சிக்கு நீங்கள் செய்த பலனை விடகட்சி பலமடங்கு உங்களுக்குச் செய்திருக்கு அந்த நன்றிக்கடனுக்காவது ஒதுங்கி இருங்கள் ப்ளீஸ் எனப் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தமிழிசையும் அண்ணாமலையின் ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகத் தமிழக பாஜகவில் நீயா.? நானா என்ற போட்டி தொடங்கியுள்ளது.

