Stock market:சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. ரூ.5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

இன்றைய சென்சக்ஸ் வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5.31 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.

ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், தகவல்தொடர்பு , ஐடி உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி , எஸ்பிஐ வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவனம் உள்ளிட்ட சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 இல் உள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஏற்பட்ட 1.24% சரிவில் [1,017.23 புள்ளிகளில்] 538 புள்ளிகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *