
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் விசாரணைக்காகச் சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடியை உடைத்தனர்.
மேற்குவங்க மாநிலம் கிழக்கு வெடினிபூர் பகுதியில் இன்று (ஏப்ரல் 06) தேசிய புலனாய்வு முகமை (என்ஐ.ஏ., ) அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். கடந்த 2022ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற அதிகாரிகளை அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமானோர் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தினர். அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான மனபேந்திரா ஜனா என்பவரைக் கைது செய்ய என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டு இருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
”நாங்கள் சோதனை நடத்த வருகிறோம் என உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை” என என்.ஐ.,ஏ., அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் ரேஷன் ஊழல் தொடர்பாகத் திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்மீது அப்பகுதி மக்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

