
தெலுங்கானா மாநிலத்தில் பிறந்து 40 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை எலி கடித்ததில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்குக் கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்தபோது குழந்தையைப் படுக்க வைத்து விட்டுத் தாயார் குளிக்கச் சென்றார்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரெனக் குழந்தையின் மூக்கை எலி கடித்தது.இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டுக் குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.
அப்போது குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்குக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.எலி இருக்கும் வீடுகளில் குழந்தையைத் தரையில் படுக்க வைக்க வேண்டாமெனச் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


