
ஊட்டியில் கொட்டும் உறைபனி காரணமாகக் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை பனிக்காலம் ஆகும்.
மிச்சாங் புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய பனிப்பொழிவு தாமதமாகத் தொடங்கியுள்ளது.
மழை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அத்துடன் உறைபனியும் கொட்டுகிறது.50 நாட்களுக்குப் பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.
ஊட்டித் தாவரவியல் பூங்கா புல் மைதானம், படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல் தரைகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போலக் காட்சியளித்தது.
இதுதவிர கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள்மீதும் உறைபனி கொட்டி யிருந்தது.நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 7.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில் இன்று 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
கொட்டும் உறைபனி காரணமாகக் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குளிரிலிருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகின்றனர். இன்னும் வரக்கூடிய நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தேயிலை செடிகள் மட்டுமின்றி புல் வெளிகள், செடி, கொடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 0 டிகிரிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

