Government of Tamil Nadu: புதிய நலவாரியம் துவக்கம்!

சென்னை: தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆக.15ம் தேதி முதலமைச்சர் அறிவித்தபடி புதிய நல வாரியம் அமைத்து ஆணை பிறப்பித்துள்ளார். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று உதவிகள் பெற வழிவகை செய்துள்ளனர். உணவு டெலிவரி உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களுக்காகப் புதிய நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இவ்வரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனியே நலவாரியம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.08.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, “தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig)தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Platform Based Gig Workers’ Welfare Board)” எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் (Gig) தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *