
மதுரை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களைச் சி.பி.ஐ., உதவியுடன் கைது செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.
தேனி மருத்துவக்கல்லுாரி
சென்னை, தண்டையார்பேட்டை உதித் சூர்யா, 2019ல் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சியடைந்து தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததாக கண்டமனுார் போலீசார் மோசடி வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கராகச் செயல்பட்ட சென்னை, கீழ்பாக்கம் தருண்மோகன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இன்று விசாரணை
கடந்த ஜூலை 26ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகுறித்து, இன்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 02) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,”நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ உதவியுடன் கைது செய்ய வேண்டும். சிபிசிஐடி போலீசார் 4 மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”என உத்தரவிட்டார்.


