
ராமன் விளைவு கண்டுபிடிப்பு இந்திய ஆராய்ச்சியை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்துள்ளதாகத் தேசிய அறிவியல் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்த சி.வி.இராமன் வேதிப்பொருட்களைக் கடந்துசெல்லும் ஒளியின் அலைநீளத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சி முடிவு இராமன் விளைவு என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு சர் சி.வி.இராமனுக்கு வழங்கப்பட்டது. இந்த அரிய கண்டுபிடிப்பை இராமன் கண்டுபிடித்த நாளான பிப்ரவரி 28ஆம் நாளை 1986ஆம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், நம் நாட்டை முன்னேற்றுவதற்கான ஆராய்ச்சி, புத்தாக்கம், அறிவியல் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் தேசிய அறிவியல் நாள் இன்று என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நாளில் இராமன் விளைவை சர் சி.வி.இராமன் கண்டுபிடித்ததை நினைவுகூர்ந்துள்ள அவர், இந்தக் கண்டுபிடிப்பே இந்திய ஆராய்ச்சியை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.



