
அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்; தவெக ஆட்சியில் தமிழகம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2027-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் முதலீட்டு தரவுகள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய வீழ்ச்சியை காட்டுகின்றன.
மற்ற மாநிலங்களில் புதிய ஆட்சிகள் தொடங்கியவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்துள்ள வேளையில், தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசு பொறுப்பேற்ற பிறகு, ஒட்டுமொத்த முதலீடுகள் முந்தைய காலாண்டை காட்டிலும் 74 புள்ளி 5 சதவீதமும், தனியார் முதலீடுகள் 77 புள்ளி 63 சதவீதமும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளன என்று நயினார்நாகேந்தின் தெரிவித்துள்ளார். மேலும். முன்மொழியப்பட்ட திட்டங்களில் வெறும் ரூபாய் 11-ஆயிரத்து 237 கோடியை மட்டுமே பெற்று, தேசிய அளவில் தமிழகம் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது எனவும், முதலமைச்சர் ஜோசப்விஜய்யிடம் போதிய திட்டமிடல் இல்லாததும், புதிய முதலீட்டாளர்களை கவரும் கொள்கைகள் தவெக அரசிடம் இல்லாததுமே இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் என்றும், இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு தனியார் முதலீடுகளும் ரூபாய் 2-ஆயிரத்து 80 கோடியிலிருந்து ரூபாய் 720 கோடியாக குறைந்துள்ளன என்றும் வெறும் விளம்பர பேச்சுகளாலும், ரீல்ஸ்களாலும் மட்டும் புதிய முதலீடுகளை கொண்டுவர முடியாது என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசிற்கு, இந்த தரவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.
எனவே, முதலமைச்சர் ஜோசப்விஜய் உடனடியாக சரியான தொழில் கொள்கைகளை உருவாக்கி, சரிந்துவரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்; இல்லையேல், நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதை தவெக அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று நயினார்நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



