
தேர்தலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட விருப்பம் இல்லை என்றாலும் மத்திய அமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர் நிற்கவைக்கப்பட்டாரென முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகத் தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் புதுச்சேரி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, வேட்பாளர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, நமது பாராளுமன்ற வேட்பாளர் வெற்றி பெற்று செல்ல வேண்டும். மத்தியில் வரக்கூடிய ஆட்சியும் பாஜக தான். 400 வரை அவர்கள் வரப்போகிறது. மீண்டும் மோடி பிரதமராக வரப்போகிறார். இங்கிருந்து செல்லக்கூடிய வேட்பாளர் யாராக இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஒருவர் சென்றால், அமைச்சர் கூடக் கேட்கலாம். அவருக்கு விருப்பம் எல்லாம் கிடையாது. மத்திய அமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் அவர் வலியுறுத்தி நிற்க வைக்கப்பட்டு உள்ளார் என்றார்.
மேலும் கடந்த தேர்தலில் நாம் விட்டு விட்டோம். அதனை நாம் பிடிக்க வேண்டும். மொத்தம் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உழைப்பு என்பது முக்கியம். வலுவடைந்த பாரதம் வேண்டும் எனத் தொலைநோக்கு எண்ணம் நிறைவேற்ற மீண்டும் ஆட்சி வர வேண்டும். முஸ்லிம், கிறிஸ்து ஒட்டு போடமாட்டார்கள் என்ற நிலை தற்போது இல்லை. இப்ப மாறி உள்ளது. எல்லா திட்டங்களும் செயல்ப்படுத்தப்பட்டு வருகின்றது. எல்லா சாலைகளையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கின்றது. கடன் பெற்று செய்யவதற்கும் அனுமதி அளிக்கிறது. நமது உறுப்பினர் சென்றால் நல்ல திட்டங்களைக் கொண்டு வருவார்.நமது சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை அதிகம் பெற்று தர வேண்டும். நாம் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். அதிக வாக்கு வித்தியாசம் வேண்டும். அந்தந்த தொகுதிகளில் நாம் வேலை செய்ய வேண்டும். 27 ஆம் தேதி மாலையிலிருந்து தேர்தல் பிரசாரம் துவக்கப்பட உள்ளது என்றார்.



