
திண்டுக்கல் பெரியார் நகரில் குடும்ப தகராறில் மனைவியைச் சுவற்றில் தலையை மோதிக் கொலை செய்த கணவனைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 55). இவரது கணவர் முத்தையா (வயது 60).முத்தையா பெரியார் நகருக்கு அருகில் சொந்தமாக வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்குத் திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர்.
மூன்று மகள்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர், முத்தையாவிற்கும் லஷ்மிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறு ஆத்திரமடைந்த முத்தையா மனைவி லட்சுமியை அடித்து உதைத்து தலையைப் பிடித்துச் சுவற்றில் மோதிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிவும் திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கணவர் முத்தையாவை பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


