
திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த பெண்ணைக் கொலை செய்ததாக ராணுவ அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவில் இருந்த 30 வயதான பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், அத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்ததாக ராணுவ அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் புறநகர் பகுதியில் தலையில் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாகப் பணியாற்றி வரும் ரமேந்து உபாத்யாய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளாரெனக் காவல் கண்காணிப்பாளர் சரிதா டோபால் கூறினார்.
ரமேந்து உபாத்யாய் (40), சிலிகுரியிலிருந்து டேராடூனுக்கு அண்மையில் மாறுதலாகி வந்துள்ளார். அங்கு நேபாள வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரேயா ஷர்மா (30) என்பவரை முதன் முதலாக நடன பார் ஒன்றில் சந்தித்துள்ளார். இவர்களது நட்பு விரைவில் திருமணத்தை உறவாக மாறியதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரேயா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரமேந்து உபாத்யாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, உணவகத்தில் ஸ்ரேயாவுடன் இணைந்து மது அருந்திய ரமேந்து உபாத்யாய், அவரை நீண்ட பயணத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். அதற்குச் சம்மதம் தெரிவித்து அவருடன் ஸ்ரேயா சென்றுள்ளார். நகரின் புறநகரில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தை அவர்கள் கார் அடைந்தபோது, காரை நிறுத்திய அவர், அந்தப் பெண்ணின் தலையில் சுத்தியலால் பலமுறை அடித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவரது உடலைச் சாலையோரம் வீசிவிட்டு அங்கிருந்து அவர் தப்பி சென்றதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், குற்றத்திற்கு பயன்படுத்திய கார், குற்றம் செய்தபோது உபாத்யாய் அணிந்திருந்த உடைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டேராடூனுக்கு மாற்றப்பட்ட பிறகு, ஸ்ரேயாவுக்காகத் தனி பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரைத் தங்க வைத்ததாக உபாத்யாய் தெரிவித்ததாகப் போலீசார் கூறியுள்ளனர். அந்தப் பிளாட்டில் அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். மேலும், தன்னை திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி ஸ்ரேயா தொடர்ந்து வற்புறுத்தியதாக உபாத்யாய் தெரிவித்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

