
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் தீவிரப்புயலாக மாறி நாளை மாலையில் தொடங்கி நள்ளிரவுக்குள் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் இன்று அதிகாலை ஐந்தரை மணி நிலவரப்படி தென்கிழக்கு வங்கக்கடலில் சென்னைக்குக் கிழக்கு தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவில் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை அடையும், அதன்பின் வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளைக் காலை தீவிரப் புயலாக மாறும்.
அதன்பின் வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே நாளை மாலை முதல் நள்ளிரவுக்குள் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

