தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வரமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ராணியார் அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் பிறந்த தினத்தன்று, பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.
இதில், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் பிரதமர் மோடி குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குச் சென்று சட்டம் ஒழுங்கை பார்த்துவிட்டு, தமிழ்நாட்டில் வந்து சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று விமர்சித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும், தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வரமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்றும் தெரிவித்தார்.



