Melmalayanur: அரசு பேருந்தை சிறைபிடித்த பள்ளி மாணவர்கள்!

Advertisements

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேல்மலையனூர் அடுத்த சீயபூண்டி கிராம பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மேல்மலையனூர் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வேளையில் காலை நேரத்தில் பேருந்து வந்து செல்லும் நிலையில் மாலை நேரத்தில் வீடு திரும்பும் மாணவர்களுக்கு மேல்மலையனூரிலிருந்து தாயனூர், சீயபூண்டி வழியாக பேருந்து இயக்காததால் பள்ளி மாணவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து வீடு வந்து சேருகின்றனர்.

பள்ளி வேளையில் அரசு பேருந்து இயக்க செஞ்சி அரசு பணிமனை மேலாளரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை சீயபூண்டியில் திரண்டனர். பின்னர் அவ்வழியே வந்த அரசு நகர பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேருந்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அரசு பள்ளி மாணவர்களிடம் பள்ளி நேரத்துக்கு பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *