
திருநெல்வேலி: திருநெல்வேலியில், புயல், நிவாரண பணிகளின்போது, அமைச்சர் உதயநிதியுடன் சென்ற இயக்குநர் மாரி செல்வராஜ்(உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கியவர்) அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாட்களாகப் பெய்த அதி தீவிர கன மழையால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்டதென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில், பஸ் பாதைகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் பல நகரங்கள், கிராமங்கள், எந்தத் தொடர்புமின்றி துண்டிக்கப்பட்டு உள்ளன. 50க்கும் மேற்பட்ட ரயில்களும், 400 ஆம்னி பஸ்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன், உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூம் சேர்ந்து மீட்பு பணிகளைப் பார்வையிடுவதுடன், அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானதும், அமைச்சர் உதயநிதி நடித்த படத்தை இயக்கியவர் என்ற ஒரே காரணத்தினால், அவர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க முடியுமா? இதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



