Rahul Gandhi:மோடி போலப் பேசினால்… மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள்!

“தற்போது மோடி பேசுவது போல ஒரு சாதாரண மனிதர் பேசினால், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள்” என்று மோடி பேச்சிற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, “பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, “நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்” என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், “தற்போது மோடி பேசுவது போல ஒரு சாதாரண மனிதர் பேசினால், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள்” என்று மோடி பேச்சிற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “தன்னை கடவுள் அனுப்பியதாகக் கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார்; ஏழைகளுக்குச் சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை.

இந்தத் தேர்தல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது என்பதை கடைசியாகப் பாஜக ஒத்துக்கொண்டுள்ளது.

ஒருவேளை இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பைப் பாஜக சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *