
பெண்களின் சபரிமலை! மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்…
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில், குளச்சலுக்குத் தெற்கில் உள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் உள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.
முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டனர், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி ‘பகவதி அம்மன்’ என்று அழைக்கப்பட்டார். ‘மந்தைக்காடு’ என்ற பெயரே மருவி, ‘மண்டைக்காடு’ என்று மாறியதாகத் தல வரலாறு கூறுகின்றது.நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீத்தொலைவில் மண்டைக்காடு எனும் ஊரில், குளச்சலிலிருந்து மூன்று கி.மீத்தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம்.
“கடல் மட்டத்திலிருந்து சுமார் 64 மீட்டர் உயரத்தில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமையப் பெற்றுள்ளது”
அம்மன்:
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள்பாலிக்கிறார்.இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்தப் பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாகப் புற்றுக்கோயிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்குப் பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்தப் புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.

பெண்களின் சபரிமலை:
15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதி அம்மன் இக்கோயிலின் சிறப்பாகும். பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா.

திருவிழா:

அதிகாலை 5 மணி முதல் காலை 10.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.மாசித்திருவிழா 10 நாள்கள் இங்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

