
மதுரவாயலில் அருகே தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்காகாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சென்னை மதுரவாயல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பெரிய அளவில் கடைகளுக்குச் சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ், உதவி ஆய்வாளர் செல்லதுரை உள்ளிட்ட போலீசார் தலைமையில் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கீழ்ப்பாக்கம் சக்தி நகர் 2வது தெருவைச் சேர்ந்த தங்க மாரியப்பன்(36) என்பவரைப் பிடித்து விசாரணை செய்தபோது குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் திருவேற்காடு ஸ்ரீதேவி நகர் பகுதியில் உள்ள குடோனில் வெளி மாநிலங்களிலிருந்து குட்காவை அதிக அளவில் வாங்கி வந்து பதுக்கி வைத்துக் கடைகளுக்கு மொத்தமாகச் சப்ளை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் குட்காவை எடுத்து வருவதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் குடோனை வாடகை விட்ட சந்திரசேகர் என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவேற்காடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் குடோன் வாடகைக்கு விடப்பட்டு வரும் நிலையில் அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் நேற்று மதுரவாயல் கந்தசாமி நகர் ஐந்தாவது தெரு பகுதியில் கருப்பசாமி (58) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 35 கிலோ குட்கா மற்றும் 91 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்க மாரியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


