
பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், பாதுகாப்புக்காகவும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும் என்று நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.
கோவை புதூரில் “சில்ட்ரன் சாரிடபுள் டிரஸ்டு” காப்பகத்தில் 36 பெண் குழந்தைகள், சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக நிதி திரட்டுவதற்காகக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கலை நிகழ்ச்சியில் “வாழை, ப்ளூ ஸ்டார், எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நடிகை திவ்யா துரைசாமி கலந்து கொண்டு குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி அவர்களை மகிழ்வித்தார்.
கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்புக் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்பின்னர் பேசிய நடிகை திவ்யா துரைசாமி, சிறப்புக் குழந்தைகளின் நலனுக்கு முடிந்த அளவு நேரத்தைச் செலவிட வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



