TN Transport Association: வரும், 30ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு!

Advertisements

சென்னை: ‘கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என, அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின், ஆறு கோரிக்கைகள் தொடர்பான, மூன்றா-ம் கட்ட பேச்சு நேற்று நடந்தது.

தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், தொழிற்சங்க நிர்வாகிகள் சவுந்தரராஜன், ஆறுமுகநயினார், கமலகண்ணன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில், ‘ஊதிய ஒப்பந்த பேச்சு தொடர்பான கோப்புகள், நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பிப்., 6ம் தேதி, அகவிலைப்படி உயர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப செயல்பட தயாராக இருக்கிறோம். வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது, பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது’ என்று கூறப்பட்டது.

அடுத்த கட்டமாக, பிப்., 7ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தலாம் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், ”பேச்சு அமைச்சர் வராதது வருத்தம் அளிக்கிறது. காலவரைக்கு உட்பட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு தயாராக இல்லை. இது எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதையொட்டி, வரும் 30ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்த உள்ளோம்,” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *